ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது.
இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும். புதுவையில் லேசான மழையும், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்,
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்சையும் ஒட்டி பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணி 9 சென்டிமீட்டர் மழையும், சின்னக்கல்லார் (கோவை) திருப்பத்தூர் தலா 7 சென்டி மீட்டர் மழையும், வால்பாறை (கோவை) திருவாலங்காடு (திருவள்ளூர்) தலா ஐந்து சென்டி மீட்டர் மழையும் மேட்டூர் (சேலம்) செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்) தலா நான்கு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
செப்டம்பர் 14 ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 14, 15 தேதிகளில் கேரளா கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 18 மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 15-9-2020 இரவு 11:30 மணி வரை கடல் உயரலை 3 மீட்டர் முதல் 3.4மீட்டர் வரை எழும்பக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.