ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளை இணைக்கும் நாட்டின் முதல் லிஃப்ட் வகை பாலத்தின் எழில்மிகு தோற்றத்தைக் காட்டும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, சொந்த ஊருக்கு சென்ற வட மாநில தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வரும் நிலையில், ராமேஸ்வரம் கடலில் புதிய பாம்பன் பாலம் கட்டும் பணிகள் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
ராமேஸ்வரம் தீவையும் பாம்பன் நிலப்பகுதியையும் இணைக்கும் 2 கிலோ மீட்டர் நீள பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டு 105 ஆண்டுகள் ஆகி விட்டது. எனவே அங்கே புதிய பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான முதல் தூண் அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது..தொடர்ந்து, ரயில் பாலத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியிலும் கடலின் உள் பகுதியிலும் தூண்கள் அமைக்க அதிநவீன எந்திரங்களின் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன.
திடீரென கொரோனா தொற்று பரவல் ஏற்பட, பாலத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இந்நிலையில், தற்போது நோயின் தாக்கம் குறைந்து வருவதாலும், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். இதை அடுத்து பாம்பன் புதிய ரயில் பால கட்டுமானப் பணி மீண்டும் சூடுபிடித்துள்ளது. தற்போது வரை 8 தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பாலம் எப்படி இருக்கும் என்பது குறித்த அனிமேஷன் வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த அனிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார். புதிய பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதையின் குறிப்பிட்ட பகுதி லிஃப்ட் போல அப்படியே மேலே தூக்கப்படும். முந்தைய ஹைட்ராலிக் வகை தூக்குப் பாலத்தைப் போல் அல்லாமல், இது செங்குத்தாக மேலே லிஃப்ட் போல் தூக்கப் படும்
இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் வெர்டிக்கிள் லிஃப்ட் பாலம் இதுதான். இதனால், ரமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள், இனி பாம்பன் பாலத்தின் அடியில் கப்பல்கள் செல்வதைப் பார்க்கவும் குவிவார்கள்.