நான் அப்படி கூறவில்லை… ஜகனுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் அதுவே நிதர்சனம் என்று திருமலை திருப்பதியில் வேற்று மதத்தவர் தரிசனம் தொடர்பில் டிக்ளரேஷன் விவாதம் குறித்து ஒய்வி சுப்பாரெட்டி விளக்கம் அளித்தார்.
திருமலையில் பிற மதத்தவர் டிக்ளரேஷன் தொடர்பாக தான் செய்த அறிவிப்பு விவாதங்களுக்கு ஏதுவாகியது குறித்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பா ரெட்டி பதில் அளித்துள்ளார்.
திருமலையில் பிற மதத்தவர் டிக்ளரேஷன் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்று தான் கூற வில்லை என்றார். உலக அளவில் ஒவ்வொரு நாளும் பல மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு வருகிறார்கள் என்றும் அவர்கள் அனைவரையும் கட்டாயமாக டிக்ளரேஷன் கேட்பதில்லை அல்லவா? என்று மட்டுமே தான் கூறியதாகவும் தெரிவித்தார்.
ஒரு பிரிவு மீடியா வேண்டுமென்றே தன் அறிவிப்பை விவாதத்திற்கு உட்படுத்தி உள்ளது என்றார். தற்போது எழுந்துள்ள விவாதம் குறித்து சனிக்கிழமை ஸ்ரீவாரி ஆலயம் எதிரில் செய்தியாளர்களிடம் சுப்பாரெட்டி உரையாடினார்.
கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் ஆந்திரபிரதேஷ் முதல்வர் ராஜசேகர ரெட்டி ஸ்ரீவாரி தரிசனத்திற்கு சென்றபோது டிக்ளரேஷன் கொடுக்கவில்லை என்று மட்டுமே கூறினேன் என்றார்.
அதேபோல் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் கொடுக்க வேண்டிய தேவை இல்லை என்று மட்டுமே எடுத்துக் கூறினேன் என்றார். அதைத் தவிர எனக்கு வேறு உத்தேசம் இல்லை என்றும் டிக்ளரேஷன் நிபந்தனையை முழுவதுமாக எடுத்து விட வேண்டும் என்று தான் எங்கும் கூறவில்லை என்றும் கூறினார்.
ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் நேரத்தில் அனாவசியமான விவாதங்களை கற்பிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது திருமலை ஸ்ரீவாரி தரிசனத்திற்குப் பிறகே பாதயாத்திரையைத் தொடங்கினார் என்று ஒய்வி சுப்பா ரெட்டி கூறினார். அதன் பிறகு திருப்பதியிலிருந்து கால்நடையாக வந்து சுவாமி தரிசனம் செய்து கொண்டு வீட்டுக்குத் திரும்பினார் என்றார். ஜெகன்மோகன் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஸ்ரீவாரி தரிசனம் செய்து கொண்ட பிறகே முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் என்றும் நினைவு படுத்தினார்.
முதல்வர் ஜகனுக்கு திருமலை ஸ்ரீவாரு மீது அபாரமான பக்தி விசுவாசம் இருக்கிறது என்று கூறுவதற்கு இதைவிட ஆதாரங்கள் வேறு என்ன வேண்டும் என்றார். அதனால்தான் அவர் சுவாமி தரிசனத்திற்கு வரும் போது டிக்ளரேஷன் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று கூறினேன் என்றும் அதைத் தவிர அந்த நிபந்தனையை முழுவதுமாக எடுத்து விட வேண்டும் என்று தான் எங்கும் கூறவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சட்டத்தில் ரூல் 136ன் படி, ஶ்ரீவாரிதரிசனத்திற்கு ஹிந்துக்கள் மட்டுமே அருகதை உடையவர்கள். ஒருவேளை பிற மதத்தவர்கள் சுவாமி தரிசனம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் தாம் ஹிந்து மதத்தவர் அல்ல என்று தேவஸ்தான அதிகாரிகளிடம் கூறி செல்ப் டிக்ளரேஷன் கொடுக்க வேண்டும் என்று உள்ளது. டிடிடி சட்டம் ரூல் 137 இல் இந்த விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
2014இல் அரசாங்கம் வெளியிட்ட மெமோ படி யாராயிருந்தாலும் குறிப்பிடப்படும் படியான ஆதாரங்கள் இருப்பவரானால்… உதாரணத்திற்கு யேசையா, அகமது, சர்தார் சிங், இப்படிப்பட்ட பிற பெயர்கள் அல்லது அவர்களின் உடல் மீது பிறமத தொடர்பான அடையாளங்கள் இருந்தால் தேவஸ்தான அதிகாரிகளே டிக்ளரேஷன் கேட்பார்கள்.
ஆனால் கடந்த காலத்தில் பல பிற மதத்தைச் சேர்ந்த அரசியல், அரசாங்க பிரமுகர்கள் சுவாமி தரிசனத்திற்கு வந்த சந்தர்ப்பங்களில் டிக்ளரேஷன் கொடுக்கவே இல்லை. திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி பிரம்மோற்சவம் நடக்கும் போது மாநில அரசாங்கத்தின் தரப்பில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த மாதம் 23 ஆம் தேதி சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்க உள்ளார்.
வரப்போகும் ஜெகனை டிக்ளரேஷன் கேட்கத் தேவையில்லை என்று அறிவித்ததால் விவாதம் ஆரம்பமானது. ஆனால் தான் அறிவித்ததன் உத்தேசம் அது அல்ல என்று அவர் விவரம் அளித்ததால் இந்த விவாதத்திற்கு ஃபுல்ஸ்டாப் விழுமா அல்லது எதிர் கட்சித் தலைவர்களிடம் இருந்து தாக்குதல் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.