விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தவறாக பிரச்சாரம் செய்யபடுகிறது, புதிய சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்..
மதுரையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “நாடாளுமன்றத்தில் 2 புதிய சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த நாடு இந்தியா! புதிய விவசாய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி,
புதிய விவசாய சட்டத்தால் வரிகள் குறையும், புதிய சட்டத்தால் நேரடி வர்த்தகம் ஊக்குவிக்கப்படும், புதிய சட்டத்தால் வெளிநாடு, உள்நாட்டு ஏற்றுமதி அதிகரிக்கும்.
புதிய சட்டத்தால் இடைத் தரகர்கள் முறைக்கு வாய்ப்பு இல்லை. விளை பொருட்களை கள்ளச் சந்தையில் பதுக்க முடியாது. விவசாயிகளுக்கு அதிக லாபத்தை புதிய சட்டம் வழங்கும்.
விவசாய ஒப்பந்தம் உள்ளூர் மொழிகளில் இருக்கும்! புதிய சட்டங்கள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தவறாக பிரச்சாரம் செய்யபடுகிறது. புதிய சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம்!
தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்கு கிஸான் திட்டம் கொடுக்கப்படுகிறது. விளைவிக்கும் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்தவே புதிய சட்டங்கள்.
விவசாயிகள் மட்டுமே விலையை நிர்ணயிக்க முடியும், கிஸான் திட்ட மோசடியில் தமிழக அரசு இன்னும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதிமுக – பாஜகவுக்கு இடையே எந்தவொரு மனக்கசப்பும் கிடையாது, இதே கூட்டணி தொடரும்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரின் நடவடிக்கைகள் தெரியவரும்” என கூறினார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை