வரும் அக்.7ம் தேதி முதல் சென்னையில் புறநகர் மின்சாரரயில் சேவைகள் இயக்கப் படும் என்று கூறப் பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் அனைத்து வகையான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. பின்னர் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, சரக்கு ரயில்களும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு சேர்க்கும்பொருட்டு, சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இருப்பினும், பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் புறநகர் மின்சார ரயில்கள் அப்போது இயக்கப் படுவதாகக் கூறப்படவில்லை.
இந்நிலையில், தற்போது, அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
புறநகர் ரயில் சேவையில் பணியாற்றும் 100 % பணியாளர்களை 1-ஆம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் இல்லாமல் முழுமையாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளது. 450-க்கும் மேற்பட்ட புறநகர் ரயில் சேவை தினசரி செயல்பட்டு வந்தது. இருப்பினு, இன்றைய நிலையில் தற்போது தினமும் 300 முறை ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவைக்கு ஏற்ப முழுமையாக பின்னர் ரயில் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் சேவை எங்கே வரை செயல்படும், எத்தனை முறை என்பது குறித்து தற்போது ஆலோசித்து வருகின்றனர். இதுவரை புறநகர் ரயில் சேவைக்கான வழிமுறைகளை மத்திய ரயில்வே வெளியிடவில்லை. எனினும் புறநகர் ரயில் சேவையை தமிழக அரசு அனுமதிக்க தயாராக இருக்கிறது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்