புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதால், 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கை
நேற்று அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது
இதற்கிடையில், மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 11-ஆம் தேதி வடக்கு அந்தமான் பகுதியில் உருவாகும். தெற்கு ஆந்திர கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
மீனவர்களுக்கான எச்சரிக்கை :-
இன்று, முதல் வருகின்ற 14ஆம் தேதி வரை பலத்த காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு குமரி கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.