குலசேகரட்டினம் முத்தாரம்மன் கோயில் பூசாரி உபட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!
குலசை முத்தாரம்மன் கோயிலில் நாளை தசரா திருவிழா தொடங்க உள்ளது. இந்நிலையில், கோயில் பூசாரி உட்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சனிக்கிழமை நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்னமும் பாதிப்புகள் கட்டுக்குள் வராத சூழலில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டால் நோய்த் தொற்று மேலும் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில் மக்கள் இதனால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தசரா திருவிழாவுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தினசரி ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள 8 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை தசரா திருவிழா தொடங்குவதால் கோயில் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கோயில் பூசாரி, உதவி பூசாரி, டைப்பிஸ்ட் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து அவர்கள் மூவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுதிக்கப்பட்டனர். கோயி்ல் பணியாளர்கள் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோயில் முழுதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.