பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் எனபிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக உணவு தினத்தை முன்னிட்டு, 1945ஆம் ஆண்டு ஐநா சபையால் எப்ஏஓ எனப்படும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் அக்.16 வெள்ளிக்கிழமை அன்று 75 ரூபாய் நாணத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!
17 புதிய வகையான 8 பயிர்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களான, நெல், கரும்பு, கோதுமை உள்ளிட்டவற்றிற்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அரசே கொள்முதல் செய்வது ஆகியவை நாட்டின் உணவுப் பாதுகாப்பின் முக்கியமான பகுதி என்று சுட்டிக் காட்டினார். மேலும், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த முயற்சிகளை தொய்வின்றி மேற்கொள்ள தமது தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசு உறுதி பூண்டுள்ளது என்றார்.
தொடர்ந்து, அன்பு மகள்களான நமது பெண் பிள்ளைகளின் குறைந்தபட்ச திருமண வயதை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் குறித்த கருத்துப்பகிர்வு விவாதம், ஆலோசனைகள் ஆகியவை நடைபெறுவதாக பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார். தாம் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டதைப் போல, அன்பு மகள்களின் திருமணத்துக்கான சரியான வயதை நிர்ணயம் செய்யவும், முடிவு செய்யவும் அமைக்கப்பட்ட குழு அது குறித்து ஆய்வு செய்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போது குறைந்தபட்ச திருமண வயது ஆணுக்கு 21 வயது எனவும், பெண்ணுக்கு 18 எனவும் உள்ளது. இது வருங்காலத்தில் பெண்ணுக்கு 21 வயது என அதிகரிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது.