நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது என புதுகையில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளகளிடம் பேசிய போது கூறினார்.
புதுக்கோட்டையில் அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது. இந்த விவகாரத்தில் எந்த குளறுபடியும் இல்லை .
ஓபிசி இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தமிழக அரசு இட ஒதுக்கீட்டை பெற்றே தீரும். ஐரோப்பிய நாடுகளில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் மிகக் குறைவான அளவே வைரஸ் பரவல் ஏற்படுகிறது .
நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இருப்பினும் அண்டை மாநிலங்களில் அதிக அளவில் வைரஸ் பரவல், மழைக் காலம் தொடக்கம், பொதுமக்கள் பேருந்துகளிலும், கடை வீதிகளிலும் சகஜ நிலைக்கு திரும்பியது ஆகியவற்றால் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
- செய்தி: தனபால், புதுக்கோட்டை