நவராத்திரி முதல்நாள் ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கை அம்மன்.
இந்திரகீலாத்ரி மலைமீது சரந் நவராத்திரி உற்சவங்கள் கண்ணுக்கு விருந்தாக ஆரம்பமாகியுள்ளன. முதல் நாள் சுவர்ண கவச அலங்காரத்தில் துர்க்கா தேவி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தாள்.
நகர போலீஸ் கமிஷனர் பத்துல ஸ்ரீனிவாசுலு, ஈஓ சுரேஷ்பாபு தம்பதிகள் அம்மனுக்கு முதல் பூஜை நடத்தினார்கள். சுவர்ண கவச அலங்காரத்தில் அம்மனை தரிசித்தால் சகல தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நவராத்திரி உற்சவங்களின் முதல் நாள் ஆனதால் காலை 3 மணிக்கு சுப்ரபாத சேவையோடு தொடங்கி ஸ்நபனாபிஷேகம், பால போக நிவேதனம், நித்ய அர்ச்சனை ஆகியவற்றை பூர்த்தி செய்து ஒன்பது மணியிலிருந்து பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதித்தார்கள்.
முதலில் டிக்கெட் உள்ளவர்களை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதித்தார்கள். சுமார் நான்காயிரம் போலீசார் உற்சவங்களில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஒவ்வொரு மணிக்கும் ஒரு ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அம்மனை தரிசிக்கும் ஏற்பாடு செய்திருந்ததாக கனகதுர்கா கோவில் ஈஓ சுரேஷ்பாபு தெரிவித்தார்.
கனகதுர்காதேவி தேவஸ்தானத்தில் ஒவ்வொரு ஆண்டும் உற்சவங்களின் ஒருபகுதியாக நடத்தும் ஆர்ஜித சேவைகளான லட்ச குங்குமார்ச்சனை, ஸ்ரீசக்கர நவாவரண அர்ச்சனை, சண்டீ யாகங்களை கோவிட் சூழ்நிலை காரணமாக பக்தர்களின் பிரதிநிதிகளாக ரித்விக்குகள் நடத்துவார்கள் என்று தெரிவித்தார்.
இந்திரகீலாத்ரி மலை மீது நடக்கும் தசரா உற்சவங்களுக்கு பிரத்தியேக அதிகாரியாக சந்திரசேகர் ஆஜாதை அறநிலையத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது. மீடியா கோஆர்டினேடராக சீதா டைரக்டர் ராமச்சந்திர ராவை நியமித்துள்ளார்கள்.
மலையின் கீழ் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து க்யூ வரிசை தொடங்குகிறது. மலையின் கீழ் மூன்று க்யூ வரிசைகளாகத் தொடங்கி மேலே வந்தபின் ஓம் டர்னிங் அருகில் ஐந்து வரிசைகளாக விரிகிறது. அங்கிருந்து இலவச, நூறு ரூபாய், 300 ரூபாய் லைன்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அம்மனின் தரிசனம் செய்து கொண்டபின் பக்தர்கள் படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வருவார்கள். கீழே பிரசாதம் கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த வருடம் அன்னதானம் ஏற்பாடுகள் செய்ய வில்லை.
பக்தர்கள் கவனத்திற்கு:
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கைகளுக்கு கிளவுஸ் அணிவது கட்டாயம். லைனில் சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு போடப்பட்ட வட்டங்களில் மட்டுமே நிற்க வேண்டும். பக்தர்கள் தாங்கள் குடிக்கும் தண்ணீரை தாங்களே பாட்டில்களில் எடுத்து வரவேண்டும்.
10 வயதுக்கு உள்ளாகவும், 65 வயதிற்கு மேலாகவும் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் அனுமதி இல்லை. டிக்கெட் எடுத்து வருபவர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 15 நிமிடங்கள் முன்பாகவே இருக்க வேண்டும். ஆலயத்தில் லிஃப்ட், பஸ் வசதிகள் இல்லை.
காட் ரோடு வழியை முழுவதுமாக அடைத்து விட்டார்கள். பக்தர்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பதற்கு க்ளோக் ரூம்கள் மலையின் கீழே ரதம் சென்டர் அருகில் இருக்கின்றன.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்