தேனியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தது காவல்துறை!
தேனியில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டனர். முன்னதாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர்.
தேனியில் புதிய வேளாண்மைச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போடி விலக்கு பகுதியிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை கண்டன ஊர்வலம் நடைபெறும் என்று அறிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனா காலம் என்பதாலும், தடை அமலில் இருப்பதாலும், இந்த ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. மேலும் அனுமதியின்றி ஊர்வலத்தில் விவசாயத்திற்கான டிராக்டர் போன்ற வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஸ்வி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த கே.எஸ்.அழகிரி, வேளாண் சட்டத்திற்கு எதிரான போரட்டத்தை சீர்குலைப்பதாக காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து, தாம் தங்கியிருந்த தனியார் விடுதியிருந்து நேரு சிலை வரை ஊர்வலமாகச் செல்ல முயன்றார் கே.எஸ்.அழகிரி!
இந்நிலையில், தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையில் காவலர்கள், விடுதி வாயில் முன்பு கே.எஸ்.அழகிரியை தடுத்து நிறுத்தி, அவரை கைது செய்வதாக அறிவித்தனர்.
பின்னர் கே.எஸ்.அழகிரி கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் 300 பேரும் கைது செய்யப்பட்டனர்.