காவலர் வீரவணக்க நாள் : தேசத்திற்கான சேவையின் போது தன்னுயிர் ஈந்த காவல்துறை தியாகிகளுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும் நன்றி செலுத்துகிறோம்! அவர்களின் தியாகமும், சேவையும் இந்திய மக்களின் நினைவில் நீங்காமல் இருக்கும்! என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இன்று, நாடு முழுதும் காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பணியின் போது உயிர்த்தியாகம் செய்த போலீசாருக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
காஷ்மீர், லடாக் பகுதியில் 1959 அக்.21ல் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் நம் துணை ராணுவப் படையினர் 10 பேர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் நினைவாக அக்.21 ஆம் தேதி, காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில், பணியின் போது உயிர் நீத்த போலீசாருக்கு, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்படும். உயர் அதிகாரிகள் உட்பட போலீசார் அனைவரும், கைகளில் கறுப்புப் பட்டை அணிகின்றனர்.
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,
நாடு முழுவதும் உள்ள நமது போலீஸாருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதே காவலர் நினைவு நாள். கடமையின்போது, உயிர்த்தியாகம் செய்த அனைத்து போலீஸாருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தியாகமும் சேவையும் எப்போதும் நினைவில் இருக்கும்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இருந்து கொடூரமான குற்றங்களுக்கு தீர்வு காண்பது வரை, பேரழிவு காலத்தில் உதவி செய்வதில் இருந்து கொரோனாவுக்கு எதிராக போராடுவதை வரை நமது போலீசார் எப்போதும் சிறப்பான சேவை செய்கின்றனர். பொது மக்களுக்கு உதவ எப்போதும் தயார் நிலையில் இருக்கும் போலீஸார் குறித்து பெருமை கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு நாடு முழுதும் முதலமைச்சர்கள் இது தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அஞ்சலி செலுத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்… தங்கள் குடும்பத்தினர் நலனைக்காட்டிலும், பொதுமக்களின் நலனே முக்கியம்” எனும் உயர்ந்த நோக்கில், விடுமுறை தினங்கள் இல்லாமல் தங்கள் வாழ்வியலை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கும் காவல்துறை நண்பர்களுக்கு தேசிய காவலர்கள் நினைவு தினத்தில் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தில் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் அஞ்சலி செலுத்தினார்.
மாவட்டங்களில் அந்த அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.