பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் பிரிவினைவாதிகள் குழு அக்டோபர் 29, 30, 31 தேதிகளில் ஜூம் செயலி (Zoom) வழியாக தமிழ்நாடு விழா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விழாவில் கரு பழனியப்பன், திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி, கி.வீரமணி உட்பட இந்து ஆன்மிக விரோதிகள், இந்து மதத்தை மட்டுமே கேலி பேசும் நாத்திகர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆச்சரியமாக இந்த அழைப்பிதழில், பேரூர் ஆதீனம் மருதாசலம் அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுரு அடிகளார் ஆகியோரும் கலந்து கொள்வதாக பெயர்களைப் பார்த்ததும் இந்து ஆன்மிக உணர்வாளர்கள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.
ஈசனை வழிபடும் சைவ ஆதீனங்கள் ஈசனை வசை பாடுபவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதா? என்று தங்கள் வருத்தத்தையும் எதிர்ப்பையும் சமூகத் தளங்களில் பதிவு செய்தனர். இந்து ஆன்மிக வாதிகளால் பெரிதும் போற்றப்படும், வணங்கி கொண்டாடப் படும் சைவ ஆதினங்கள் இவ்வாறு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டத்தில் பேசுவது தவிர்க்கப் பட வேண்டும் என்று தங்கள் கருத்துகளையும் தெரிவித்தனர்.
கருப்பர் கூட்டம் என்ற பெயரில் கந்த சஷ்டி கவசத்தை இந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டம் இழிவு படுத்திய போது, கோவை பகுதியைச் சேர்ந்த காமாட்சிபுரி ஆதினமும் இதே சிரவை ஆதினமும் தான் பெரிய அளவில் எதிர்ப்புக் குரல் எழுப்பி, கந்த சஷ்டி பாராயண நிகழ்ச்சிகளை எல்லாம் நடத்தினர். இதனை சுட்டிக் காட்டிய இந்து ஆன்மிக உணர்வாளர்கள், கந்தனை மட்டுமல்ல அனைத்து இந்து மதக் கடவுள்களையும் இழிவு படுத்தி வீடியோக்களை கருப்பர் கூட்டம் வெளியிட்டது. தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானை இழிவுபடுத்தியதும் இந்த பெரியாரிய கூட்டமைப்புதான்… போன மாதம் இந்தக் கூட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கிவிட்டு, இந்த மாதம் இதன் கூட்டத்திலேயே பங்கேற்பதா என்று தங்களது ஆதங்கங்களை பலரும் பதிவு செய்தனர்.
இதை அடுத்து, ஆதீனங்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்து ஆன்மிகவாதிகள் பரவலாகக் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், வி.எச்.பி,, வட தமிழகம் பகுதி மாநில தலைவர் சு.சீனிவாசன் நம்மிடம் ஒரு தகவலைத் தெரிவித்தார். இன்று முற்பகலில் பேருர் ஆதினம் மருதாசலம் அடிகளாரை கோவை பேருர் மடத்தில் வைத்து தாம் சந்தித்ததாகவும், இந்த விவகாரத்தில் தாங்கள் அந்த இணையவழிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று உறுதி பட தெரிவித்ததாகவும் கூறினார்.
இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரின் ‘தமிழ் நாடு விழா’ இணையவழி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேச இருப்பதாக சமுக வலைதளங்களில் அழைப்பிதழ் பரப்பப்பட்டு வருவது குறித்து ஆதினத்திடம் தாம் வினவியதாகவும், இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பேச்சாளர்கள் அனைவருமே இந்து தர்ம விரோத- தேச விரோத நபர்களாக இருப்பதையும் தாம் சுட்டிக் காட்டியதாகவும் தெரிவித்தார் சு.சீனிவாசன்.
அப்போது, இது குறித்து கருத்து தெரிவித்த பேரூர் ஆதீனம், மற்ற பேச்சாளர்கள் பற்றிய விவரம் தம்மிடம் சொல்லப்படவில்லை எனவும் ‘தமிழ்நாடு விழாவில்’ ஆசியுரை வழங்க வேண்டும் என தம்மிடமும், சிரவை ஆதினத்திடமும் தெரிந்த நபர் அழைத்ததின் பேரில் நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டதாகவும், இதன் பின்னணி குறித்து அப்போது சொல்லப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், மற்ற பேச்சாளர்கள் குறித்த விவரம் அறிய வந்ததும் இரண்டு ஆதினங்களும் இந்த இணையவழி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இல்லை என முடிவெடுத்திருப்ப தாகவும் ஆதினம் தம்மிடம் தெரிவித்ததாக, சு.சீனிவாசம் நம்மிடம் கூறினார்.
நவம்பர் 1ஆம் தேதி அன்று பேருர் மடத்திலேயே தனியாக ஒரு நிகழ்ச்சி நடத்த உத்தேசித்திருப்பதாக ஆதினம் கூறியுள்ளார். குறிப்பாக, தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என சொச்சைப்படுத்திய ஈ.வே.ரா., சீடர்கள், இவ்வாறு சீர்மிகு தமிழின் வளர்ச்சிக்காக ஆன்மிக உணர்வுடன் செயல்பட்டு வரும் ஆதீனங்களின் புகழுக்குக் களங்கத்தை விளைவிக்கும் வகையில், தமிழின் பெயரால் திட்டமிட்டு செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று விஎச்பி வட தமிழக மாநிலத் தலைவர் சு.சீனிவாசன் தமது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.