- திருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு.
- தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ள கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா, கிருஷ்ணன் கோவிலில் இருந்து குன்னூர் செல்லும் வழியில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை தொல்லியல்துறை பாதுகாத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்தப்பகுதியில் காணப்படுபவை பெருங் கற்காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழிகள். போக்குவரத்து நகர் குடியிருப்புப் பகுதியில் ஒரு முதுமக்கள் தாழி மண்ணில் புதைந்துள்ளது மிகத் தெளிவாக பார்க்க முடிகிறது. அதன் அருகிலேயே மற்றொரு தாழியின் மேல்பகுதி உடைந்து இடைப்பகுதி மட்டும் மண்ணுக்குள் புதைந்து காணப்படுகிறது.
பழங்காலத்தில் இவற்றை பெருங்கற்காலப் பண்பாடு அல்லது இரும்புக்காலம் என்று அழைப்பார்கள். இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை வளர்ச்சி பெற்றது. பெரிய பெரிய கற்களைக் கொண்டு, இறந்தவர் நினைவாக நினைவுச் சின்னங்களை எழுப்பினர். பெருங்கற்கால சின்னங்களாக கற்பதுக்கை, கல்திட்டை, கல்குவை, கல்வட்டம், குத்துக்கல் மற்றும் முதுமக்கள் தாழி ஆகிய பல்வேறு வழிகளில், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை கடந்த ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்துள்ளது.
பெருங்கற்கால சின்னங்கள் வளர்ச்சி அடைந்த பிறகு முதுமக்கள் தாழிகளாக தோற்றம் பெற்றன. பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த இடங்களை, தொல்லியல் இடங்களாக தேர்வு செய்து, அவற்றை பாதுகாக்க மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.
தற்போது திருவில்லிபுத்தூர் அருகே முதுமக்கள் தாழி கண்டு பிடிக்கப்பட்டதை ஆராய்ச்சி இடங்களாக தேர்வு செய்து, முதுமக்கள் தாழியை பாதுகாத்திட வேண்டும் என்று, தொல்லியல் துறைக்கு ஆராய்ச்சி முனைவர் பேராசிரியர் கந்தசாமி மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.