பெண்கள் குறித்து சனாதன தர்மம் கூறுகிறது என்று, இழிவான கொச்சைச் சொற்களால் குறிப்பிட்டுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
யூடியூப் சேனல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இதில் திருமாவளவன் சனாதன தர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, தவறான தகவல்களை இட்டுக்கட்டிப் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலானது. இந்த வீடியோ ஆன்மிக இந்துக்களை கொதிப்படையச் செய்தது. நாடெங்கும் திருமாவளவன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு வலுத்தது.
ஏற்கெனவே, சரக்கு மிடுக்கு என்று கூறி, பெண்களை மிகக் கேவலமாகக் குறிப்பிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களிடையே தவறான வழி காட்டியிருந்தார். அப்போதும் எதிர்ப்புகள் வலுத்தன.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் அஸ்வத்தாமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவுக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் மனுதர்மத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக பொய்யான தகவல்களை கூறி, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் திருமாவளவன் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
காண்க செய்தி: https://dhinasari.com/latest-news/178472-complaints-against-thirumavalavan.html
இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
295 ஏ -வேண்டுமென்றே மத உணர்வுகளுக்கு தீங்கிழைக்கும் வகையில் மதங்கள்,மத நம்பிக்கைகளை இழிவு படுத்துதல்
298-வார்த்தைகளால் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பேசுதல்
505 1 – குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்தி,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், வதந்தி அல்லது அறிக்கை வெளியிடுதல்
505 – 2 – அறிக்கை வெளியிட்டு இருபிரிவினருக்கு இடையே மோதல்,வெறுப்பை ஏற்படுத்துதல்
153- ஆத்திரமூட்டி, கலவரத்தை ஏற்படுத்துதல்
153 ஏ – இருபிரிவினருக்கிடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிடுதல்
இந்தப் பிரிவுகிளின் கீழ் திருமாவளவன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. திருமாவளவன் வீடியோவை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.