சங்க பரிவார் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மூலம் சமூக பணிகளில் ஈடுபட்டு பின்னாளில் அரசியலுக்கு வந்தவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன்.
தமிழக பாஜக., வில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்ற வானதி சீனிவாசனுக்கு இப்போது கட்சி புதிய பொறுப்பை கொடுத்துள்ளது. வானதி சீனிவாசன் பாரதிய ஜனதாகட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் என்ற பொறுப்புக்கு உயர்ந்துள்ளார்.
தமிழக பாஜக விற்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் போதே அதில் வானதி சீனிவாசனின் பெயரும் அடிபட்டது. அந்த நிலையில் எவரும் எதிர்பாராத நிலையில், எல் முருகன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது வானதி சீனிவாசனுக்கு பாஜக மகளிரணி தேசிய தலைவர் என்ற பதவி கிடைத்துள்ளது. இதனை பாஜக மேலிடம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா நியமித்துள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது