இந்தியா தாக்குதல் நடத்தும் என்பதால், வேறு வழியின்றி உடனடியாக அபிநந்தன் விடுதலை செய்யப் பட்டார் என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
அபிநந்தன் குறித்த விவாதக் கூட்டத்திற்கு வந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் கால்களில் நடுக்கம் தெரிந்தது. அவருக்கு வியர்த்துக் கொட்டியது’ என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.!
அபிநந்தன் தங்கள் பிடியில் இருந்த போது இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளின் உயர்மட்டத்திலான அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஒமர் ஜாதவ் பாஜ்வா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இருப்பினும் மிக முக்கியமான அந்த அலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்கவில்லை. அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் சம்மதித்து தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது, எவை எவை விவாதிக்கப்பட்டன என்பது குறித்து அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் அயாஸ் சாதிக் தற்போது தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்!
இது தொடர்பாக நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அயாஸ் சாதிக் கூறியதாக பாகிஸ்தான் செய்தி ஊடகம் டம்யா நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது…
அயாஸ் சாதிக் கூறியதாக வெளியான செய்தியில், ‘ இம்ரான்கான் பங்கேற்க மறுத்த கூட்டத்தில் (அபிநந்தன் குறித்த கூட்டம்) ஷா முகமது குரேஷி பங்கேற்றது எனக்கு (அயாஸ் சாதிக்) நன்றாக நினைவில் உள்ளது. அந்தக் கூட்டம் நடைபெறும் அறைக்குள் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வா வந்தார். அப்போது அவரது கால்கள் நடுங்கின. அவரின் உடல் நடுங்கியது. அவருக்கு வியர்த்துக் கொட்டியது!
அந்தக் கூட்டத்தில் அப்போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அவரை (அபிநந்தனை) இப்போது விட்டுவிடுவோம்! இல்லை என்றால் பாகிஸ்தான் மீது சரியாக 9 மணிக்கு இந்தியா தாக்குதல் நடத்தும் என்று கூறினார். இது பெரும் அழுத்தத்தை தந்திருந்தது. அதன் பிறகு அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்..! – என்று குறிப்பிட்டுள்ளார் அயாஸ் சாதிக்.