வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் நவம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி தொடங்கி திருச்செந்தூர் வரை நவ.6 முதல் டிச.6 வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்குமாறு இரு பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டன. இந்த மனுக்களின் மீதான விசாரணையின் போது, கொரோனா பரவக் கூடிய அச்சம் இருப்பதால், வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசின் சார்பில் அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது. ஆனால் பாஜக சார்பில் தடையை மீறி வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை தடையை மீறி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜக.,வினர் கையில் வேலுடன் திருத்தணி நோக்கி புறப்பட்டனர். பின் தடையை மீறி தொடங்கப்பட்ட வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த யாத்திரையை தொடங்கிய தமிழக பாஜக தலைவர், எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டி.ஜி.பி உத்தரவை எதிர்த்து, யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கோரி பாஜக., சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பாஜக.,வின் வேல் யாத்திரைக்கான தடையை நீக்க முடியாது. பாஜகவுக்கு குறைந்தபட்ச பொறுப்புணர்வு வேண்டும் என்று கூறியது.
மேலும், பாஜக.,வின் வேல் யாத்திரையின் போது, மாஸ்க் அணியாதவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை என்று கேட்டது நீதிமன்றம்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்!