அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.
அப்போது அவர், அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தெளிவான முடிவை அளித்துள்ளனர் என்றார். தாம், அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கைக்குரியவனாக செயல்படுவேன். மக்களை பிரித்தாளும் அதிபராக இருக்க மாட்டேன்- அனைவரையும் அரவணைத்து செல்வேன் என்று உறுதி அளித்தார்.
அமெரிக்காவின் முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர மக்களுக்கு பாலமாக இருப்பேன் என்று கூறிய அவர், கோவிட் முடக்க காலத்தில் பெருந்திரளாக வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றார்.
துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்படுவார் என்று குறிப்பிட்ட அவர், தென்னாசியாவில் இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் உயர் பதவியை அடைந்துள்ளார் கமலா ஹாரிஸ் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
எனது குடும்பத்தின் அன்பு, ஆதரவு இல்லாமல் இந்த நிலைக்கு வந்திருக்கமுடியாது என்ற ஜோ பிடன், கருப்பின மக்களை அரவணைத்து செல்வோம் என்றார்.
டிரம்ப்புக்கு வாக்களித்தவர்கள் எதிரிகள் அல்லர் அவர்களும் அமெரிக்கர்கள்தான். எனக்கு வாக்களிக்காத போதும் அவர்களின் நலனுக்காகவும் உழைப்பேன் என்று ஜோ பிடன் குறிப்பிட்டார்.
சர்வதேச அளவில் அமெரிக்காவின் நற்பெயரை உயர்த்துவோம். சர்வதேச அளவில் அமைதி நிலவ பாடுபடுவேன் என்று தனது எதிர்கால நம்பிக்கையை வெளிப்படுத்தினார் ஜோ பிடன்.
அமெரிக்க துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய போது, வெற்றிக்காக உழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.
மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கின்றனர். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்க மாட்டார்கள். கருப்பின பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் சம உரிமை நிலைநாட்டப்படும் என்று கூறினார் கமலா ஹாரிஸ்.
அமெரிக்க மக்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். 55 ஆண்டுகளுக்கு முன் வாக்களிக்கும் உரிமை பெற்ற பெண்கள் புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்துள்ளனர். அதிபர் தேர்தல் மூலம் அமெரிக்காவில் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளோம். ஒபாமா வழியில் அமெரிக்கா நலனுக்காக செயல்படுவேன் என்று உறுதி கூறினார் கமலா ஹாரிஸ்.