அமைச்சர் துரைக்கண்ணு இறப்பை அரசியலாக்குவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல – அமைச்சர் செல்லூர் ராஜு
வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு வின் இறப்பு சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அரசியலாக்குவது அழகல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரை செல்லூர் ரவுண்டானாவில் ரூ.66 இலட்சம் செலவில் அமையவுள்ள கபடி வீரன் சிலை கட்டுமான பணிகளை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கூடைப்பந்தாட்டத்திற்கு அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரத்திலும், டென்னிஸ் விளையாட்டிற்கு நியூயார்க்கிலும் தட களத்திற்கு இங்கிலாந்திலும், கூடைப்பந்தாட்ட த்திற்கு சீனாவிலும், ஹாக்கி விளையாட்டிற்கு டெல்லியிலும், கால்பந்தாட்டத்தில் தமிழகத்தின் ஏற்காட்டிலும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கபடி வீரர்களுக்காக மதுரை செல்லூர் ரவுண்டானாவில் சிலை அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவிதமான செயல்திட்டம் இருக்கிறது அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் கட்சியை வளர்க்க பேசுவார்கள் அதேபோன்று பாஜக தலைவர்களும் பேசுகிறார்கள் ஜனநாயக அமைப்பில் அதில் ஒன்றும் பிழையில்லை.
அதிமுக தலைமையிலான தமிழக அரசு எப்போதும் எதிர்க்கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பும் அங்கீகாரமும் அளிக்கிறது ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் அவ்வாறு நடைபெற்ற வரலாறு இல்லை. ஜெயலலிதாவுக்கு மனித வெடிகுண்டு அச்சுறுத்தல் விடப்பட்டது. அப்போது துணை முதல்வராக இருந்த முக ஸ்டாலினை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்த முயன்றார் அதனை இன்றுவரை அவர்கள் கண்டு பிடிக்கவே இல்லை.
இவையெல்லாம் திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு. கடந்த பத்தாண்டுகளாக தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.
தற்போது அரசியல் கட்சித் தலைவர்களை நேரடியாகத் தாக்குவது என்பது மற்றொரு பரிமாண வளர்ச்சியாக இருக்கிறது இதற்கு காரணம் ஊடகங்கள்தான். ராஜபக்சே போர்க்குற்றவாளி, இலங்கை மீது பொருளாதார தடை உள்ளிட்ட தீர்மானங்கள் தொடங்கி எழுவர் விடுதலை வரை அதிமுக அரசு தொடர்ந்து இதனைச் செய்து வருகிறது.
7.5 விழுக்காடு விஷயத்தில் தமிழக முதல்வர் என்ன நடவடிக்கை மேற்கொண்ட அதே போன்று எழுவர் விடுதலையிலும் சரி தேவையான நடவடிக்கையை மேற்கொள்வார். வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு வின் இறப்பு சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் அரசியலாக்குவது அழகல்ல என்றார்.