தற்போதைய இந்தியாவின் கொள்கை மிகவும் தெளிவானது… புரிந்து கொள்வது, மற்றவர்களை புரிந்து கொள்ள செய்வது. சிலர் புரிந்து கொண்ட பின்பும் நம்மிடம் வாலாட்டினால், நமது இராணுவ வீரர்களின் எதிர்த் தாக்குதல் மிகவும் உக்கிரமாக இருக்கும். என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி!
2014 ஆம் ஆண்டு இந்திய தேசத்தின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்ற நரேந்திர தாஸ் மோடி பின்னர் ஒவ்வோர் ஆண்டும் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த ஆண்டு (அக்டோபர் 23 2014 அன்று) தீபாவளி பண்டிகையை கடல் மட்டத்திலிருந்து 18 875 அடி உயர சியாச்சின் பனிமலை பேஸ் காம்ப்பில் டூட்டியில் இருந்த இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
2015 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (நவம்பர் 11 2015 அன்று) பஞ்சாப் மாநிலத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லையில் டூட்டியில் இருந்த ராணுவத்தினருடன் அவர்கள் காம்ப்பில் கொண்டாடினார்.
2016 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (அக்டோபர் 30 2016 அன்று ) ஹிமாச்சல பிரதேசத்தில் ITBP எனப்படும் இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் படையினரின் இந்திய சீன எல்லைப்பகுதியில் ஒரு அவுட் போஸ்டில் டூட்டியில் இருந்த வீரர்களுடன் கொண்டாடினர்.
2017 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (அக்டோபர் 19 2017 அன்று) காஷ்மீர் மாநில எல்லைப்புற பகுதியில் குர்ரே செக்டரில் (Gurez sector) டூட்டியில் இருந்த BSF வீரர்கள் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
2018 ஆம் ஆண்டு தீபாவளியை (நவம்பர் 7 2018 அன்று) உத்தராகண்ட் மாநில இந்திய சீன எல்லைப்பகுதியில் டூட்டியில் இருந்த ITBP படை வீரர்களுடன் கொண்டாடினார்.
2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (அக்டோபர் 27 2019 அன்று) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரஜோரி (Rajouri) பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த இந்திய ராணுவத்தினருடன் கொண்டாடினார்…
2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை (நவம்பர் 14 2020 அன்று) ராஜஸ்தான் மாநில எல்லைப்பகுதியான ஜெய்சால்மீர் அருகே இருக்கும் புகழ்பெற்ற லோங்கேவாலா (Longewala) அவுட்போஸ்ட்டில் BSF வீரர்களிடையும் இந்திய ராணுவ பிரிவினரோடும் தீபாவளியை கொண்டாடினார். 1971 ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தின் போது பாகிஸ்தானிய பெரும்படைக்கு ஒரு சிறு இந்திய படைப்பிரிவு தண்ணி காட்டிய யுத்த பூமி அது.
இந்த தீபாவளியின் போது, நாட்டின் எல்லைகளை காப்பதில் உலகின் எந்த சக்தியாலும் வீரமிக்க நமது படை வீரர்களை தடுக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தீபாவளியை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீரில் உள்ள லோங்கேவாலா ராணுவ முகாமில், படை வீரர்களுடன் சேர்ந்து மோடி கொண்டாடினார். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்களிடையே பேசிய அவர், 130 இந்தியர்களும் நமது படை வீரர்களுடன் உள்ளனர் என்றார். வீரர்களின் தீரத்தையும், அவர்ளை வெல்லமுடியாது என்பதை பற்றியும் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாக மோடி கூறினார்.
பாதுகாப்புத் துறையில் திறனை அதிகரித்து அந்த துறையை சுயசார்பு மிக்கதாக மாற்ற கடினமாக இந்தியா உழைக்கிறது என மோடி கூறினார். உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதில் முனைப்பு செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
இன்று நாடு பிடிக்க நினைக்கும் சக்திகளால் உலகிற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று சீனாவையும், பாகிஸ்தானையும் மறைமுகமாக குறிப்பிட்ட அவர், இந்த ஆக்கிரமிப்பு சிந்தனை 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் ஒரு மன நோய் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா எந்த விலை கொடுத்தாவது தனது நலனை காத்துக் கொள்ளும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளதாக மோடி கூறினார். பனி சூழ்ந்த மலைச்சிகரமானாலும் சரி, பாலைவனமானாலும் சரி, வீரர்களை சந்தித்தால் மட்டுமே தமது தீபாவளி முழுமையான தீபாவளியாக இருக்கும் என மோடி கூறினார்.