பாஜக., தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான சி.டி.ரவி திங்கள் கிழமை அன்று தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை (ஜே.என்.யூ) சுவாமி விவேகானந்தா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பாரதம் என்ற கருத்துருவுக்காக முன் நின்றவர் சுவாமி விவேகானந்தர். அவரது தத்துவமும் மதிப்பீடுகளும் “பாரதத்தின் வலிமையை” பறை சாற்றுகின்றன. எனவே ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சுவாமி விவேகானந்தர் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்வது மிகச் சரியானது. பாரதத்தின் தேசபக்தி மிக்க மகானின் வாழ்க்கை, வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் “என்று ட்வீட் செய்துள்ளார் சி.டி.ரவி.
நான்கு தினங்களுக்கு முன்னர் தான், பிரதமர் நரேந்திர மோடி, ஜே.என்.யூ வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையை திறந்து வைத்துப் பேசினார். அப்போது அவர், மக்களுக்கு கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் சித்தாந்தம் தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் நாட்டை ஆதரிப்பதையும் எதிர்க்காத வகையிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜே.என்.யு., வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் என்றும், சுவாமி விவேகானந்தர் அனைவரிடமும் பார்க்க விரும்பும் தைரியத்தையும் இரக்கத்தையும் அது வளர்க்கும் என்றும் பிரதமர் மோடி அப்போது கூறினார்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நீண்ட காலமாக இடதுசாரிகளின் புகலிடமாகவே கருதப்படுகிறது. அதனுடன் இணைந்த மாணவர் சங்கங்கள், வளாகத்தில் பல்வேறு தளங்களிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு ஏபிவிபி உள்ளிட்ட பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் இவர்களை “தேச விரோத” உணர்வைத் தூண்டிவிடும் இடதுசாரி மாவோயிஸ அமைப்புகளின் செயல்பாடுகளைத் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், சி.டி.ரவி தனது கருத்தை இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாகவே நேரு குடும்பப் பெயர்கள் கொண்ட சில திட்டங்களின் பெயர்கள் பாஜக., ஆட்சியில் மாற்றப் பட்டுள்ளன. எனவே ஜேஎன்யு பெயரையும் எஸ்வியு என மாற்றலாம் என்ற கருத்துகள் இப்போது வலம் வருகின்றன!