வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்ற போது மேல்மருவத்தூர் அருகே விபத்து ஏற்பட்டது. கடவுள் அருளால் உயிர் தப்பினோம்… எவ்வகையிலும் கடலூர் நோக்கி செல்கிறேன். போலீஸார் விசாரிக்கிறார்கள். கடவுள் முருகன் காப்பாறினார். என் கணவருக்கு அவர் மீது வைத்த நம்பிக்கை தெரிந்தது என்று டிவீட் பதிவிட்டு, இரு படங்களையும் போட்டிருந்தார் நடிகை குஷ்பு.
குஷ்புவின் இந்த டிவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை குஷ்பு இன்று காலை தன்னுடைய காரில் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் நோக்கி மேல்மருவத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார். செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே மேல் மருவத்தூர் பகுதியில் குஷ்பு சென்ற கார் மீது, பக்கவாட்டில் வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோதியபடி, உரசிச் சென்றுள்ளது. இதில், குஷ்பு சென்ற காரின் பக்கவாட்டுப் பகுதி பெரும் சேதமடைந்துள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு சேதம் அடைந்துள்ளது. காரில் பயணித்த குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தில் குஷ்புவின் கார் நிலை தடுமாறியதாகவும், உடனே சுதாரித்துக் கொண்ட டிரைவர் காரை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தியதாகவும் கூறப் படுகிறது. இந்த விபத்துக்குப் பின்னர், குஷ்பு காரின் பின் வந்த பாஜக நிர்வாகிகளின் காரில் கடலூருக்கு குஷ்பு புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே, இந்தப் புகைப்படங்களை தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார் குஷ்பு. அதற்கு பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.