திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் நவ.20 தீபத்திருவிழா முதல் நாள் கொடியேற்றம்… நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.20 வெள்ளிக்கிழமை இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதலில் நகரின் காவல் தெய்வமான துர்க்கை அம்மனுக்கு உத்ஸவம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக, சுவாமி மாடவீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 18ம் தேதி, கோவில் பரிவார தேவதையான பிடாரியம்மன் உத்ஸவம், 19ம் தேதி விநாயகர் உத்ஸவம் ஆகியவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியுள்ளது.
கொடியேற்றத்தை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மை ஸமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், தங்கக்கொடி மரத்தின் முன் எழுந்தருளினர்.
தொடர்ந்து கோவில் உட்பிராகாரங்களில் வெள்ளி விமானங்களில் வீதி உலா நடைபெறும். ஆறாம் நாள் விழாவில் நடைபெறும் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம், இந்த ஆண்டு கொரோனாவால் ரத்து செய்யப்பட்டு, கோயிலில் உள்பிராகாரத்தில் பஞ்ச மூர்த்திகள் உலாவாக நடைபெறுகிறது.
வரும் 29ஆம் தேதி அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் மலை உச்சியிலும் ஏற்றப்பட உள்ளது.
- செய்தி/படங்கள் : எஸ்.ஆர்.வி.பாலாஜி, திருவண்ணாமலை