ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்பதல் அளித்துள்ளார். தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதிக்க இந்தச் சட்டத்தில் வகை செய்யப் பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆன்லைன் ரம்மியால், பலரும் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், அரசு இதை கவனத்தில் கொண்டு அந்த விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என முதல்வர் பழனிசாமி அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சட்டத்திற்கு இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டத்தின் படி ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ. 10 ஆயிரம் அபராதமும் இரண்டாண்டு சிறை தண்டனையும், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.