பாஜக., தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார் திமுக., முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம்.
திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கே.பி.ராமலிங்கம் கடந்த ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார். திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ராமலிங்கம், கருணாநிதி உயிருடன் இருந்த போது, அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் கட்சியை கைப்பற்றுவதில் மோதல் போக்கு நிலவிய போது அழகிரியின் ஆதரவாளராக செயல்பட்டவர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், கட்சியில் இருந்து கே.பி.ராமலிங்கம் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அப்போது அவர், “என்னால் ஸ்டாலினை தலைவராக எற்றுக் கொள்ள முடியவில்லை. கொள்கை ரீதியாக, அரசியல் ரீதியாக தலைவருக்கான பக்குவம் ஸ்டாலினுக்கு இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனிதநேயமற்றவர். அரசியலுக்காகவும், தன்னை முன்னிறுத்துவதற்காகவும் மட்டுமே அவர் செயல்பட்டு வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், திமுக இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் இன்று காலை, தமிழக பாஜக., பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில், பாஜகவில் இணைந்துள்ளார். முன்னதாக, இன்று சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜக.,வில் இணைவார் என்று கூறப் பட்டது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அறிவாற்றல் மிக்கவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கும் மனப்பான்மை பழனிசாமிக்கு உள்ளது என்று கே.பி.ராமலிங்கம் முன்னர் கூறியிருந்தார். எனவே அவர் அதிமுக.,வில் இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர் பாஜக.,விலேயே இணைந்துள்ளார்.