தமிழகம், புதுவையை நோக்கி, நிவார் புயல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. மேலும், அடையாறு ஆற்றங்கரையோரம் அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நிவார் புயலால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களுடன் பேசியதாகவும், தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு நிச்சயம் செய்யும் என்றும் பிரதமர் மோடி டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவார் புயல், மாமல்லபுரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே நாளை (நவ.25) கரையைக் கடக்க உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து, இந்தப் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒரு வாரத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களை இருப்பு வைக்கவும், மருந்து மாத்திரைகளை கைவசம் வைத்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏழு மாவட்டங்களுக்கு இன்று மதியம் முதல் பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட உள்ளது.
புயல் தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், நிவார் புயல் சூழ்நிலை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் தொலைபேசியில் பேசினேன். தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தேன். பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக வேண்டிக் கொள்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்./