சென்னை, கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக., தலைவருமான கருணாநிதியின் வீட்டில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. நிவர் புயல் புதன்கிழமை இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது..
நிவர் புயலின் காரணமாக, கடந்த இரு நாட்களாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது.
தொடர் மழை காரணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் மழைநீர் புகுந்தது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ள நீரில் மிதந்தன. மேலும் மழைநீர் வீட்டின் உள்ளே புகாதவாறு அங்கே பணியாற்றி வரும் ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த இல்லத்தைத்தான் கருணாநிதி தனது காலத்துக்குப் பிறகும், தனது மனைவியின் காலத்துக்குப் பிறகும் ஏழைகளுக்கான மருத்துவமனை அமைக்க தனது தாயார் பெயரில் உள்ள அஞ்சுகம் அறக்கட்டளைக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.