மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இசைத்துறையிலும், சினிமாத் துறையிலும் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையிலும் எஸ்பிபி.,யை கௌரவிக்கும் வகையிலும் ஆந்திரா அரசு நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நடனப் பள்ளிக்கு ‘டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அரசு இசை மற்றும் நடன பள்ளி’ என்று பெயர் சூட்ட முடிவு செய்துள்ளது.
இது குறித்த தகவலை பகிர்ந்துள்ள எஸ்பிபி-யின் மகன் எஸ்பிபி சரண், இதற்காக ஆந்திர அரசுக்கும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டிக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சென்னையில் ஒரு டப்பிங் ஸ்டுடியோவுக்கு ‘எஸ்பிபி.,’ என்று பெயரிடப்பட்டது. அதை நடிகர் ராதாரவி திறந்து வைத்தார். டப்பிங் தொழிற்சங்க உறுப்பினர்கள் இது குறித்து பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவதாகத் தெரிவித்தனர்.
அண்மையில் கொரோனா தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யன் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டாலும், வேறு சில உடல் நலக் கோளாறுகளால் கடந்த செப்.25 அன்று அவர் உயிரிழந்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு திரையுலகினரையும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும் சோகக் கடலில் ஆழ்த்தியது. விருதுகள் பல பெற்றிருந்த எஸ்பிபி.,க்கு, இப்போது மேலும் ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில், இசைப்பள்ளிக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளது ஆந்திர அரசு.