Home அடடே... அப்படியா? ‘அம்மா’வை அசிங்கப் படுத்தினால்..!? ஆண்டிமுத்து ராசா, கருணாநிதி ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கடும் எச்சரிக்கை!

‘அம்மா’வை அசிங்கப் படுத்தினால்..!? ஆண்டிமுத்து ராசா, கருணாநிதி ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கடும் எச்சரிக்கை!

ttv
ttv

2ஜி ஊழல்களால் தமிழகத்தின் மானத்தை கப்பலேற்றி உலக அளவில் தமிழர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய திமுக., எம்.பி., ஆண்டிமுத்து ராசா, விஞ்ஞான ஊழலின் ஊற்றுக்கண் என்று வர்ணிக்கப் படும் கருணாநிதியின் மகனும் திமுக., தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் அநாகரிக அரசியலின் உச்சமாக இப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசி வருகின்றனர். இதற்கு அமமுக.,வின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதில், தீய சக்தி திமுக.,வுடன் 60-40 என்ற ஒப்பந்தம் போட்டு செயல்படுபவர்கள் பேசாமல் இருக்கலாம்… ஆனால், அம்மாவின் உண்மை வாரிசுகளான நாங்கள் சும்மா இருக்கமாட்டோம், அதை உணர்ந்து கொண்டு பேசுவது ஆ.ராசாவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் நல்லது என்று மிரட்டல் விடுத்திருக்கிறார் டிடிவி தினகரன்.

உலக மகா யோக்கிய சிகாமணிகளான முக ஸ்டாலின் ராசாவும் நாகரிகத்துடன் பேசவேண்டும்; புரட்சித்தலைவி அம்மா அவர்களைப் பற்றி பேச ஊழலின் ஊற்றுக்கண்களான இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? என்ற தலைப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

தற்போது ஊழல் குறித்த பேச்சு முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:

அவர் வெளியிட்ட அறிக்கை:

நாகரீக அரசியலுக்கும் திமுகவுக்கும் எந்த காலத்திலும் சம்பந்தம் இருந்ததில்லை என்பதை மு க ஸ்டாலினும் ராசாவும் கடந்த சில நாட்களாக மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். தமிழ் நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைத்த பல ஊழல்களின் ஊற்றுக்கண் ஆன ஊழலின் பிதாமகரான கருணாநிதியின் வாரிசுகள் அவர்களைப் பற்றி உலகமே அறிந்த சங்கதிகளை வீராவேசமாக பேசுவதால் மட்டுமே மறைத்துவிட முடியும் என நினைக்கிறார்கள்.

அவர்களுடைய கட்சிக்காரர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுக்க வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் 2ஜி ஊழல் மூலம் பெரும் தலைகுனிவை அவமானத்தை ஏற்படுத்திய இந்த விஞ்ஞான ஊழல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக தமிழகத்திற்கு செய்த தீமைகள் கொஞ்ச நஞ்சமா?!

ஒவ்வொரு காலத்திலும் தாங்கள் புரிந்த ஊழல்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாட்டு மக்களின் நலன்களை காவு கொடுத்தது இந்த கருணாநிதி கூட்டம் தானே! சர்க்காரியாவில் இருந்து தப்பிக்க கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்தது யார்? 2-ஜியில் இருந்து தப்பிக்க லட்சோபலட்சம் தமிழ் சொந்தங்களை இலங்கையில் கொன்றொழிக்க துணை நின்றது யார்? இப்படி ஊழல் நயவஞ்சகம் இவற்றின் மொத்த வடிவங்களான இவர்களுக்கு தமிழக மக்களுக்காக தவ வாழ்க்கை வாழ்ந்து இன்றும் அவர்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கிற புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது!

தேர்தல் ஜுரம் ஆரம்பித்துவிட்டதால் ஸ்டாலின் இனி கைத்தடிகளைத் தூண்டிவிட்டு இப்படி எல்லாம் பேச வைப்பார். அம்மா அவர்களை கொச்சைப்படுத்தும் இந்த உலக மகா யோக்கிய சிகாமணிகள் அவர்களின் மரணத்தைப் பற்றியும் வழக்கம்போல ரொம்பவும் அக்கறை உள்ளவர்கள் போன்று அவதூறு பரப்பி குளிர்காய நினைப்பார்கள். இவர்களின் மலிவான பிதற்றல்களை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்!

இது போன்று வரம்பு மீறி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாலும் அதிகாரத்தில் இருக்கும்போது போட்ட ஆட்டங்களாலும் தான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த தீய சக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் அதுதான் நடக்கப்போகிறது.. அம்மா அவர்கள் இல்லை என்பதால் இப்போதே ஆட்சியைப் பிடித்து விட்டதாக நினைத்து கற்பனை இராஜ்யத்தில் மிதக்கும் இவர்களின் கனவு ஒருநாளும் பலிக்கப் போவதில்லை.

அதிர்ஷ்டத்தால் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு நாளைக்கு அடையாளம் இல்லாமல் போகப் போகிறவர்கள் வேண்டுமானால் இவர்களின் எகத்தாளத்தையும் இழிச் சொற்களையும் கண்டும் காணாமலும் இருக்கலாம்.

ஏனெனில் அம்மாவை அசிங்கப்படுத்தும் இந்த தீய சக்திகளோடு 60-40 ஒப்பந்தம் போட்டு செயல்படுபவர்கள், ‘நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல அழுகிறேன்’ என்று பேசி வைத்துக் கொண்டு இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்!

ஆனால் தீய சக்தி கூட்டத்திற்கு சிம்மசொப்பனமாக புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உண்மையான பிள்ளைகளான அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் ஆகிய நாங்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்! அதனால் ஸ்டாலினும் ராசா போன்றவர்களும் பேசுவதற்கு முன் யோசித்து நாகரீகமாக பேசுவது நல்லது என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன் … இப்படிக்கு டிடிவி தினகரன் – என்று அந்த அறிக்கையில் எச்சரித்திருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version