தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை வீட்டுக்காவலில் வைத்ததாக ஆம்ஆத்மி கட்சி டிவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் புகாரை மறுத்த தில்லி போலீஸார், அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டனர்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவாக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் அமைப்புகளுடன் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. அதன்படி பல இடங்களில் இடதுசாரி கட்சியினர், ஆதரவு அரசியல் கட்சியினர் ஆர்பாட்டம், மறியல் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் நேற்று விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்து தில்லி விவசாய சங்கத்தினரை சந்தித்தார். மேலும் தில்லி அரசு தேவையான வசதிகளை அவர்களுக்கு செய்து தரும் என்று கூறினார்.
இதனிடையே, இன்று காலை கேஜ்ரிவால் தில்லி போலீசாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக ஆம்ஆத்மி கட்சி டிவிட்டரில் கூறியிருந்தது . மேலும், அவரை யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை எனவும், வீட்டில் இருந்து வெளியே செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப் படவில்லை எனவும் , மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவால் இது நடந்திருக்கிறது என்றும் கூறியது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தில்லி போலீஸார் மறுத்து டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டனர்.