இன்று காலை சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் இரு இடங்களில் காயங்கள் உள்ளதாகவும் எனவே இது தற்கொலையா அல்லது கொலையா என்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆக அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வந்தவர் சின்னத்திரை நடிகை விஜே சித்ரா. 29 வயதாகும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார்.
இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம் சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடிப்பதற்காக அருகிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்தார் சித்ரா
இந்நிலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் இன்று அதிகாலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தி சின்னத்திரை நடிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விஜே சித்ராவுக்கு 4 மாதம் முன் தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. கொரோனா கால நெருக்கடிகளால் வரும் ஜனவரி மாதத்திற்கு திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்!
ஹேம்நாத் உடன் தனியார் விடுதியில் தங்கி இருந்த சித்ரா, இன்று அதிகாலை 2.30 மணி அளவில் படப்பிடிப்பு முடிந்து விடுதி அறைக்கு திரும்பி உள்ளார்.அப்போது தான் குளிக்கப் போவதாகவும் அதுவரை சற்று வெளியில் காத்திருக்குமாறும் ஹேம்நாத்திடம் கூறி அவரை வெளியே அனுப்பிவிட்டு, உள்ளே அவர் கதவை பூட்டிக் கொண்டதாகக் கூறப் படுகிறது.
ஆனால் வெகு நேரமாகியும் பூட்டிய கதவு திறக்கப்படாததால் ஹேம்நாத் கதவை தட்டியுள்ளார் பிறகு விடுதி ஊழியர்களிடம் கூறி, மாற்று சாவி கொண்டு கதவைத் திறந்து பார்த்தபோது மின்விசிறியில் நைட்டி அணிந்த நிலையில், சித்ரா தூக்கில் தொங்கினார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயராகவன் விடுதிக்கு விரைந்து விசாரணை நடத்தினார் சித்ராவின் உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
தகவல் கிடைத்து விரைந்து வந்த சித்ராவின் பெற்றோர் கதறி அழுதனர் அப்போது சித்ரா அவ்வளவு மன வலிமை குறைந்தவர் இல்லை என்றும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் கூறினர்
இதனிடையே, தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் இரு இடங்களில் காயங்கள் உள்ளதாகவும், வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளதாகவும் கூறப் பட்டது.
சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது, ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சித்ராவின் கன்னத்தில் இருந்த காயங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்
சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்தும் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.