Home இந்தியா உலக ஊழல் ஒழிப்பு தினத்தில்… ஒரு சிந்தனை!

உலக ஊழல் ஒழிப்பு தினத்தில்… ஒரு சிந்தனை!

anti-corruption-day
anti corruption day

போதுமென்ற மனம்
கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்.

“ஒருவனின் திருப்தியான மனமே ஒருவனுக்கு உலகில் கிடைக்கும் உயர்ந்த வரம்” – என்ற என்றோ நான் வாசித்த வரிகளை இன்று என் மனம் அசைப்போட்டது. உலக ஊழல் ஒழிப்பு தினம் டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அனுசரிக்கப்படுகிறது. திருப்தியான மனதுடன் அனைவரும் இருந்தால் இந்த நாள் அனுசரிக்க வேண்டிய கட்டாயமே ஏற்பட்டு இருக்காது என்பதே நிதர்சமான உண்மை.

“போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்பது போல மனதினை அடக்கி நம்மிடம் இருப்பதே போதும் என்ற மனப்பாங்கை நமக்கு நாமே வளர்த்துக் கொள்வதே சால சிறந்தது. நேர்மையான முறையில் வரும் வருமானத்திலேயே திருப்தியடையும் மனத்திறனையும் வளர்த்துக் கொள்வதேயே நமது ஒழுக்கமாக கடைப்பிடித்தல் ஒன்றே இன்றைய சூழலில் முக்கியமாக கருதப்படுகிறது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சாகும் போது தேவைக்கு அதிகமான பொருளினால், பொருளாதார நிலையினால் நம் வாழ்விலும் மனக் கஷ்டமே உண்டாகும் என்பதே நிதர்சனமான உண்மை.

நாம் நம் வேலைகளுக்காக அரசுத் துறைகளில் உள்ளோர்களை அணுகும் போது அதற்கான ஆவணங்களை சரியாக எடுத்துச் சென்றோம் என்றாலே, நமக்கு மடியில் பயம் இல்லாத போது வழியில் பயமேன் என்பது போல நாமும் எதற்கும் அஞ்சாமல், லஞ்சம் தராமல் இருக்க முடியும் அல்லவா?

செய்ய வேண்டிய வேலைகளை முன் கூட்டியே செய்வதும், கடைசி நிமிட அவசரத்தையும் தவிர்ப்பதும், லஞ்சத்தை ஒழிக்கும் வழிகளில் சிலவாக உள்ளன.

சில சமயங்களில் வேண்டுமென்றே நம் காரியங்கள் லஞ்சப் பணத்திற்காக இழுத்தடிக்கப்படுகிறது என்றாலும், நம் கையில் தான் இப்போது தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளதே. அதை உபயோகப்படுத்தி காலதாமதாமாக செய்யப்படும் நம் வேலைகளை பற்றியத் தகவல்களை அறியவும் முடியும்.

சில வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் வந்த கீழ்வரும் செய்தியானது நமக்கு ஒரு படிப்பினையை அளிப்பதாக உள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு சாஃவேர் நிறுவனத்தின் நிறுவனர் ஒருவர், அவர் நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வழக்கில் தீர்ப்பு கூறும் நாளும் வந்தது. நீதிமன்றம் வந்த நீதிபதி, அங்கு இருந்தவர்களிடம் அந்த நிறுவனருக்கு காலைச் சிற்றுண்டி தருமாறு கூறினார். தான் சில நிமிடங்களில் அங்கு வருவதாகவும் கூறிச் சென்றார், நீதிபதி.

சில நிமிடங்களில் மீண்டும் அங்கு வந்த நீதிபதிக்கோ ஆச்சரியம் காத்திருந்தது. அந்தக் குற்றவாளியான நிறுவனரோ அவர் தட்டில் வைத்ததை சாப்பிடாமலேயே இருந்தார். அதனால், நீதிபதி அவரிடம் வினவ, நிறுவனரோ உணவு தன் தொண்டையில் இறங்க வில்லை என்றார்.

அப்போது நீதிபதியோ, அவரிடம், ” பாருங்கள், உங்கள் உடம்பே தேவையானதை விட அதிகமானதை எடுத்துக் கொள்ளாமல் மறுக்கிறது. இதையே உங்கள் மனமும் செய்திருந்தால் உங்களுக்கு இன்று இந்த நிலை வந்து இருக்காது,” என்றார். அதைக் கேட்ட நிறுவனரோ தாரைதாரையாக கண்ணீர் மல்க நின்றாராம். இதுதான் அந்தச் செய்தி.

நாமும் அதிகம் ஆசைப்படாமல் திருப்தியான மனதுடன் லஞ்சம் வாங்காமலும், லஞ்சம் கொடுக்காமலும் இருக்கவும், ஊழலை எதிர்த்துப் போராடவும் இந்தத் தருணத்தில் உறுதிக்கொள்வதே நம் கடமையாய் உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version