வருகிற சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவாரா? என்பது குறித்து அவரது அண்ணன் சத்திய நாராயணா செய்தியாளர்களிடம் பேசுகையில் விளக்கம் அளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் சனிக்கிழமை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வியாழன் நேற்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டும், புதிதாக கட்சி தொடங்க உள்ளதால் அதில் வெற்றி பெற வேண்டியும், உலக நன்மைக்காகவும் திருவண்ணாமலை அய்யங்குளத் தெருவில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணா, அவரது மகன் ராமகிருஷ்ணன், மருமகள் கீதாபாய் ஆகியோர் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்து வழிபட்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சத்தியநாராயணா, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தோம். தொடர்ந்து இந்தக் கோவிலில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் நாட்டு மக்களும் எல்லாக் குடும்பங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து யாகம் நடத்தப்பட்டது.
வரும் 31ஆம் தேதி கட்சியின் பெயரை ரஜினிகாந்த் அறிவிப்பார். விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு பதில் அளிப்பார். கட்சி தொடர்பாக எல்லா தகவலும் அவரே சொல்வார். அவருக்கு எல்லாவகையிலும் ஆசி அளிப்பதுதான் என் வேலை.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளதால் அதை முன்னிட்டும்கூட யாகம் நடத்தப்பட்டதாக வைத்துக் கொள்ளலாம். அவரும் நல்லா இருக்கனும், நீங்களும் நல்லா இருக்கனும்.
ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும். யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும்.
திராவிடக் கட்சிகளுக்கு கடைசிக் காலம் வந்துவிட்டது. யாரும் அவர்களை நம்பவில்லை. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அவர்கள்! ரொம்ப நாள் இருக்க மாட்டார்கள்.
எல்லா மதத்தினரும் ஒன்றுதான். எல்லா மக்களும் ஒன்றுதான். நல்லது செய்தால் நல்லதே நடக்கும். எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். பகவான் விரும்பினால் திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் போட்டியிடுவார்… என்று கூறினார் சத்யநாராயணா.
ரஜினிக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது பக்தி அதிகம். அண்ணாமலை, அருணாசலம் என்றெல்லாம் தன் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்து ஆன்மிகத்தை நெருக்கமாகக் காட்டியவர் ரஜினி. எனவே அண்ணாமலையில் அவர் தேர்தலில் போட்டியிட்டால் அருணாசலேஸ்வரர் அருள் அவருக்கு பூரணமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.
- எஸ்.ஆர்.வி.பாலாஜி, திருவண்ணாமலை