இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் இரட்டை சதம் மற்றும் இந்திய வீரர்களின் அசத்தல் பந்து வீச்சு கைகொடுக்க 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தர்மசாலாவில் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது
மொகாலியில்….
மொகாலியில் இன்று நடந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது.
அபாரமாக ஆடிய ஷிகர் தவான் அரை சதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த போது தவான் (68) அவுட்டானார். பின் இணைந்த ரோகித், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இலங்கை அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்த்தது.
அபாரமாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். தோனி (7) ஏமாற்றினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித், மூன்றாவது முறையாக இரட்டை சதமடித்து சாதனை படைத்தார்.
இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 392 ரன்கள் குவித்தது. ரோகித் (208) அவுட்டாகாமல் இருந்தார்.
கடின இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. தரங்கா 7 ரன்னில் பாண்டா வேகத்திலும், குணதிலகா 16 ரன்னில் பும்ரா வேகத்திலும் வீழ்ந்தனர்.
இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய, தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் சுழலில் திரிமன்னே(21) ஸ்டெம்புகளை பறிகொடுத்தார்.
டிக்வெல்லா(22), குணரத்னே(34), பெரேரா(5) மூவரும் சாஹல் சுழலில் சிக்கினர். பதிரனா 2 ரன்னிலும், தனஞ்ஜெயா 11 ரன்னிஞம் நடையை கட்டினனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் தனி ஒருவனாக போராடிய ஏஞ்சலா மேத்யூஸ் சதமடித்தார்.
50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் மட்டும் எடுத்த இலங்கை அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மேத்யூஸ் 111 ரன்னுடனும் லக்மல் 11 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்திய அணி சார்பில் சாஹல் 3, பும்ரா 2, வாஷிங்டன் சுந்தர், பாண்ட்யா, புவனேஷ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் தொடரை 1-1 என இந்தியா சமன் செய்தது.
3வது மற்றும் கடைசி போட்டி வரும் 17ம் தேதி விசாகபட்டிணத்தில் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும்.
இந்திய வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதமடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.