
நரசிபுரம் அருகே அதிகாலை மின்வேலியில் சிக்கி ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை நரசிபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் இருட்டுப்பள்ளம் செம்மேடு, ஆலந்துறை மற்றும் ஆனைகட்டி கணுவாய் ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் ஊருக்குள் அதிகமாக இருப்பதால் தொடர்ந்து யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழந்து வருகின்றன.
அதைத்தொடர்ந்து விவசாய நிலங்களும் யானைகள் சேதப்படுத்தி செல்கின்றன. இந்த நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், வனச்சரகத்தில் உட்பட்ட ஆலந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு கிராமம் பகுதியில் உள்ள குளத்து ஏரி பகுதியில் துரை என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் காட்டு யானை ஒன்று அந்தப் பகுதியில் உணவுக்காக வந்தது. அப்போது மின்வேலியில் பட்டு தூக்கி வீசப்பட்டு ஆண் யானை பரிதாபமாக இறந்தது. இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க அந்தப் பகுதி மக்கள் காட்டுப் பகுதிக்கு சென்றபோது யானை இறந்து கிடந்ததை பார்த்து தொண்டாமுத்தூர் வனச்சரகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வன அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆண் யானையை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விவசாய நிலத்திற்கு மின் வேலி அமைத்திருந்த துரையிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து யானைகள் உயிரிழப்பது யானைகளால் மனித உயிர்கள் பறிபோகும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணமாக உள்ளது. இதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.