சென்னை :
சென்னை மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலைப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்ட ராஜஸ்தான் போலீசார், அதே குழுவில் உடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது, சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவருடன் சென்ற மற்ற காவலர்களும் காயமடைந்தனர்.
இந்நிலையில் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கில் இருந்த குண்டு என்றும், முனிசேகரின் துப்பாக்கியால் தான் பெரியபாண்டியன் சுடப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து முதலில் ராஜஸ்தான் போலீஸாரிடம் புகார் அளித்த ஆய்வாளர் முனிசேகர், தனது புகாரில், ‘நானும் பெரியபாண்டியனும் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் அவர்கள் கம்பிகள் கட்டைகளால் எங்களைத் தாக்கினார்கள். அப்போது நான் நிலைதடுமாறி விழுந்தேன். என் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. அதனை பெரியபாண்டியன் தான் எடுத்தார். எங்களுடன் வந்த சக காவலர்கள் உதவியுடன் நாங்கள் வெளியே வந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக பெரியபாண்டியன் உள்ளே கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டார். அவர் கொள்ளையரால் சுடப்பட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் நாங்கள் உள்ளே சென்றோம். அப்போது பெரியபாண்டியன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கே அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறினார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் போலீஸார் பெரியபாண்டியன் மீது பாய்ந்த குண்டு முனிசேகரின் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு என்று கூறியுள்ளனர்.
இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதால், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் ஒரு திடீர் திருப்பமாக சென்னை கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்தரன் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போது அஜாக்ரதையாக செயல்பட்டு பெரியபாண்டியன் உயிர் பிரியக் காரணமாக இருந்ததாக முனிசேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முனிசேகர் தவறுதலாக சுட்டதாலேயே பெரியபாண்டியன் உயிரிழந்ததாக ராஜஸ்தான் போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய முரண்பட்ட தகவல்களால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது. உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று காவல் துறை மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது.