தினசரி என்கிற பெயரில் ஆன்லைனில் செய்தி தளம் ஒன்றை ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக துவக்கினார் செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள். இவர் என்னுடைய இனிய நண்பர் மட்டுமல்ல என்னுடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர். நல்ல பண்பாளர். தேசியத்தையும் தெய்வீகத்தையும் போற்றுகின்ற குணம் உடையவர். இவருடைய செய்தித்தளம் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தினசரி ஈர்க்கிறது!
நம்முடைய நாட்டின் நலன், நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய மனிதர்களுடைய மிகச் சிறந்த பண்புகளை வெளி உலகிற்கு காட்டும் திறன், சமூகத்தில் நடக்கும் அவலங்களை படம் பிடித்து காட்டும் குணம் சிறுகதைகளும் செய்திக் கட்டுரைகளும் ஆன்மீக கட்டுரைகளும் எழுதுகிற லாகவம் என அத்தனை திறமைகளையும் ஒருங்கே அமையப் பெற்றவர்தான் நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம்.
தன்னுடைய தளத்தின் 7வது ஆண்டு விழாவின் போது ஏழு நல்ல மனிதர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று இவர் எண்ணினார். விருதுகள் வாங்குகிற மனிதர்கள் மிகச் சிறந்த செயல்களை வாழ்க்கையில் செய்திருக்க வேண்டும். விருது பெறும் அன்பர்கள் தேச நலனிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆன்மீக சிந்தனையோடு நல்ல எண்ணங்களை சமூகத்தில் விதைப்பவர்களாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மனிதர்களை தெய்வத் தமிழர் விருது கொடுத்து பாராட்ட வேண்டும் என்று எண்ணினார் செங்கோட்டை ஸ்ரீராம்.
வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டுமானால் அதற்கு இளைஞர்கள் பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்திருந்தார் சுவாமி விவேகானந்தர். மனவலிமை உடல் வலிமை இவற்றோடு தூய சிந்தனையில் இருப்பவர்களால் புனித பாரதத்தை படைக்க முடியும் என்று நம்பியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜியின் பிறந்த தினத்தை வலிமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது என பாரதப் பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. வலிமையான 7 பேருக்கு வலிமையான மனிதரான நேதாஜியின் பிறந்த நாளான 23ஆம் தேதியன்று விருதுகள் வழங்கப்பட்டது சாலப் பொருத்தமாகும். ஜனவரி மாதத்தில் (12ஆம் தேதி) அவதரித்தவர் சுவாமி விவேகானந்தர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கோகலே சாஸ்திரி ஹாலில் இந்த நிகழ்வு மத்திய அரசின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் திரு டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் காவல் துறையில் மிகச் சிறப்பாக பணியாற்றிய உயர் அதிகாரி திரு டோக்ரா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். சமஸ்கிருதத்தின் தேவையை நயம்பட எடுத்துரைத்தார் திரு டோக்ரா. சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவ முன்வந்திருக்கிறார் இந்த அதிகாரி. தமிழ்நாட்டில் பணியில் இருக்கக்கூடிய பிற மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தமிழையும் சொல்லிக் கொடுத்து வருகிறார் டோக்ரா அவர்கள்.
தேசம் தெய்வீகம் இரண்டும் இரண்டு கண்கள் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அதை செயல்படுத்திக் கொண்டு வரும் ஏழு அன்பர்களுக்கு தெய்வத்தமிழர் விருது வழங்கி மகிழ்வதாக தெரிவித்தார் முன்னாள் தேர்தல் ஆணையாளர் திரு டி எஸ் கிருஷ்ணமூர்த்தி. இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டு எனக்குத் தெரிந்த சில வார்த்தைகளைப் பேசினேன்.
மிகச்சிறந்த 7 தமிழ் படைப்பாளர்களை இந்த விழாவில் கௌரவித்தார்கள். தினசரி தளத்தில் நல்ல விஷயங்களை பகிர்ந்து வரும் திருமதி ராஜி ரகுநாதன் அவர்களுக்கும் … மிகச் சிறப்பாக தமிழ் இலக்கியம் மற்றும் இந்து மத சாஸ்திர கருத்துக்களை சிறப்பாக எழுதி வரும் திரு ஜடாயு அவர்களுக்கும்… இந்து மத தெய்வங்களை தனது தூரிகையால் மிகச் சிறப்பாக ஓவியங்கள் ஆக்கும் ஓவியர் வேதா அவர்களுக்கும் … பாரத தேசத்தின் பண்பாடு சிதையா வண்ணம் பேணிக் காப்பதோடு அதற்காக குரல் கொடுத்துக் கொண்டு வரும் ஸ்ரீ டிவியின் உரிமையாளர் திரு பால கௌதமன் அவர்களுக்கும் … இந்து மதத்தின் கருத்துக்களை அவையில் சிறப்பாக முன் வைப்பதோடு சனாதன மதத்திற்கு எதிர்த்தாற்போல் செயல்படுபவர்களை நல்வழிப்படுத்த நீதிமன்றத்தை நாடும் சிறந்த வழக்கறிஞரான திரு அஸ்வத்தாமன் அவர்களுக்கும்…
சமூக பிரச்சனைகள் சம்பந்தமாக உரியவர்களிடம் நாடகத்தமிழ் இல்லாமல் எளிமையான முறையில் தயக்கமின்றி வடிவமாக்கி வரும் மதன் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் பாரத தேசத்தின் ஒப்பற்ற தலைவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியும் இந்த தேசத்தை பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் மோதிஜி அவர்களின் சொற்பொழிவுகளை தமிழில் குழைத்துக் கொடுக்கும் (வானொலி மான் கி பாத் நிகழ்ச்சி -மனதின் குரல்) கற்றறிந்த நல்லவர் திரு சுதர்சன் அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
இவ்விருதினை ஏற்ற அன்பர்கள் தங்களுடைய எண்ணங்களை சபையில் பதிவு செய்தார்கள்.
கொரானா காலகட்டத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு (வழிகாட்டு முறைகளுக்கு உட்பட்டு) இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு குற்றாலம் சித்திர சபையில் உள்ள சிவபெருமான் திருமண வண்ண ஓவியத்தை அழகாக ஃபிரேம் போட்டு நினைவுப் பரிசாக வழங்கினார் செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள்.
அழகிய தமிழில் இணைப்பு உரை வழங்கினார் சி வி சந்திரமோகன்.
கவிஞர் சுவாதி அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம் இனிதே முடிந்தது.
- கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
- ஆசிரியர், கலைமகள்