வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மது போதையில் முன்னாள் மாணவர்கள் பள்ளி ஆசிரியரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆங்கில ஆசிரியர் வன்றந்தங்கள் கிராமத்திற்கு மஞ்சுவிரட்டு விழாவுக்காக வந்திருந்தார்.
அப்போது தான் பணியாற்றும் பள்ளி அருகே சிலர் மது அருந்திக்கொண்டு இருந்ததைக் கண்ட அவர் அங்கிருந்தவர்களை கண்டித்துள்ளார். அப்போது அவர்கள் தனது முன்னாள் மாணவர்கள் என தெரியவந்தது.
போதையில் இருந்த அவர்கள், மது பாட்டிலைப் பள்ளியின் சுவர் மீது வீசினர். பாட்டில் துகள் ஆசிரியர் மீது பட்டு முகத்தில் காயம் ஏற்பட்டது.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காட்பாடி காவல் நிலையத்தில் ஆசிரியர் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில், 17 வயது சிறுவன் மற்றும் 19 வயதான அவரது நண்பர் ஆகிய இருவரும்தான் இந்தச் செயலில் ஈடுபட்டது எனத் தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.