தன் மீது புகார் அளித்து ஜெயிலுக்கு அனுப்பிய பெண்ணை இளைஞர் ஒருவர் கோடாரியால் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் கொர்லகுண்டா பகுதியில் வசிப்பவர் விமலா. அவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராகுல் தோட் என்பவர் விமலாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டி வந்துள்ளான். இதனால் விமலா 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவல் நிலையத்தில் ராகுல் மீது புகார் அளித்தார்.
இது குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் ராகுலை கைது செய்து விசாரனை நடத்தி நிர்பாயா சட்டத்தில் அவனை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று ஜாமினில் வெளியே வந்த ராகுல் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டில் இருந்த விமலாவை கோடாரியால் பயங்கரமாக தாக்கியுள்ளான். படுகாயமடைந்த விமலா ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .
இது பற்றி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராகுலை கைது செய்த போலீசார் , அவனிடம் நடத்திய விசாரணையில் மேலும் இரண்டு பேர் விமாலாவை தாக்கிய சம்பவத்தில் ராகுலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதனால் ராகுல் உட்பட மூன்று பேர் மீது போலீசார் மற்றுமொரு வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இரண்டு பேரையும் தேடி வருகின்றனர். ராகுல் தோட் விமலாவை கொடூரமாக கோடாரியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது