தமிழக பாஜக துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்த சேலம் ரமேஷ், வேலூரைச் சேர்ந்த பாஜக மருத்துவப் பிரிவு தலைவர் அரவிந்த் ரெட்டி, இந்து முன்னணி தலைவர் வெள்ளைய்ப்பன் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், தமிழக பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வரும், துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 -ம் தேதி பாஜகவில் இணைந்தார். அவரது உயிருக்கு முஸ்லீம் பயங்கரவாதிகள் குறிவைத்து உள்ளதாக உளவுத்துறை போலீசார் மத்திய, மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அண்ணாமலைக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அண்ணாமலை உள்ள இடத்தில் 5 போலீசார் காவல் பணியில் ஈடுபடுவர். அவர் எங்கு சென்றாலும் அவருடன் இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பிற்கு செல்வர். அதில், ஒருவர் காவல் சீருடையிலும், மற்றொருவர் சாதாரண உடையிலும் பணியில் இருப்பர் என்பது குறிப்பிடத்கக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதால், முக்கிய நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.