ரெப்போ ரேட் விகிதம் மாற்றமின்றி 4 சதவீதம் ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் சக்தி காந்ததாஸ் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில், ரெப்போ ரேட் விகிதம் மாற்றமின்றி 4% ஆக இருக்கும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தேவைப்படும் காலம் வரை நிதி கொள்கையை தொடர குழு கூட்டத்தில் முடிவாகி உள்ளது.
கொரோனா பாதிப்புகளில் இருந்து விடுபட்டு வளர்ச்சி நிலையை அடையும்வரை குறைந்தபட்சம் நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த ஆண்டும் இதே நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி விகிதம் மாற்றமின்றி 4.25% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் மாற்றமின்றி 3.35% ஆகவும் இருக்கும் என சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார்.
நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10.5% ஆக கணக்கிடப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டின் 4வது காலாண்டிற்கான நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் 5.2% ஆக திருத்தியமைக்கப்பட்டு உள்ளது. மேலும், 4-வது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் ரிசர்வ் வங்கி எடுக்கும். 21-22-ல் பொருளாதார வளர்ச்சி 10.5% ஆக இருக்கும். மத்திய பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.