மதுரையில் சக மாணவர்கள் முன்பு கல்லூரி பேராசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் ராஜாஜி தெருவைச் சேர்ந்த தம்பதி செல்வக்குமார் – ஜோதி. இவர்களில் 2 வது மகள் பத்மப்ரியா(21). பிஎஸ்சி கணிதம் மூன்றாம் ஆண்டு படுத்து வந்துள்ளார். 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு படிக்கும் போது படிப்பில் முதல் மாணவியாக இருந்த பத்மப்ரியா கல்லூரி படிப்பிலும் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கடந்த 2ம் தேதி அன்று பத்மப்ரியா கல்லுாரிக்கு சென்றுள்ளார். வகுப்பறையில் சக மாணவர்களுக்கு பாடம் தொடர்பான சந்தேகங்களை அவர் விளக்கிக் கூறியுள்ளார்.
அந்த வேளையில் அங்கு வந்த துறைத்தலைவர் பேராசிரயர் முத்துக்குமார், “நீ என்ன ஆசிரியரா..? பாடம் நடத்தும் அளவுக்கு வளர்ந்துட்டியா..?” என சக மாணவர்கள் முன்னிலையில் அவதூறான சொற்களில் கூறியுள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த பத்மப்ரியா அழுகவே சக மாணவர்கள் தேற்ற முயன்றுள்ளனர். அவர்களையும் முத்துக்குமார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாலை வீடு திரும்பிய பத்மப்ரியா யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். சிறிது நேரத்தில் விஷம் அருந்திய நிலையில் அவரை கண்ட பெற்றோர் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், வியாழன்கிழமை மாலை உயிரிழந்தார்.
இது குறித்து பெற்றோர்கள் கல்லூரி பேராசிரியரிடம் கேள்வி கேட்ட போதும் அவர் பொறுப்பின்றி பதிலளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார் சந்தேகத்திற்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.