திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக பா.விஷ்ணு சந்திரன் (32) ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டார்.
இத்திருக்கோயில் இணை ஆணையராக இராமேஸ்வரம் கோயில் ஆணையர் சி.கல்யாணி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரனை திருக்கோயில் செயல் அலுவலராக நியமத்து கடந்த ஜன.27-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி விஷ்ணுசந்திரன் திங்கள்கிழமை பகலில் திருக்கோயிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செயல் அலுவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கடந்த 2018 முதல் பரமக்குடி மற்றும் நாகர்கோயிலில் சார் ஆட்சியராகவும், 2019 முதல் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும் பதவி வகித்துள்ளார்.
இத்திருக்கோயிலில் கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சா.ப.அம்ரித் செயல் அலுவலராகப் பதவி வகித்தார். தற்போது 2-வது முறையாக ஐ.ஏ.எஸ். அதிகாரி பா.விஷ்ணுசந்திரன் செயல் அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.