ராமநாதபுரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஒரு புறம் உயிர்கள் பறிபோகும் சூழலில் கிளப்கள், தனியார் விடுதிகளிலும் சூதாட்டம் நடப்பது தொடர்கிறது. அண்மையில் சென்னையில் ஒரு பிரபல நடிகர்கூட சூதாடியதால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ராமநாதபுரத்தில்சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பஜார் பகுதியில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் தனியார் விடுதியில் திடீர் சோதனை நடத்தினர் . அப்போது விடுதி அறையில் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த இளையராஜா , முத்து முருகேசன் உள்ளிட்ட 10 பேரை மடக்கிப்பிடித்தனர் .
அவர்களிடம் இருந்து 31 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய மடிக் கணிணியை பறிமுதல் செய்தனர் .
10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சட்ட விரோத சூதாட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கு வரும் நிலையில் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.