அண்ணன் தம்பி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செட்டியார் பேட்டை பகுதியில் வினோத்குமார், சதீஷ்குமார் என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இதில் வினோத்குமாருக்கு சுகன்யா என்ற மனைவியும், 2 பெண் குழந்தையும் இருக்கின்றனர். மேலும் சதீஷ்குமாருக்கு ஒரு மனைவியும், 6 மாத குழந்தையும் இருக்கின்றது.
இந்நிலையில் வினோத்குமார் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மண்டித் தெருவில் சொந்தமாக மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார்.
இவரது சகோதரர் சதீஸ்குமார் அதே பகுதியில் பழுதுபார்க்கும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டது போல் பேசிக்கொண்டிருந்த இந்த இரண்டு சகோதரர்களும் வேலைக்கும் செல்லாமல், வீட்டில் யாரையும் அனுதிக்காமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் வினோத் குமாரின் மனைவி அவரது வீட்டின் ஒரு அறையில் குழந்தையை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்.
அப்போது இந்த இரண்டு சகோதரர்களும் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுகன்யா இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு மின்விசிறிகளில் தனித்தனியாக சகோதரர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.