லெஹங்கா உடையில் வைத்து கடத்தப்பட்ட போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிகாரிகளின் வலையில் சிக்காமல் இருக்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மறைத்து வைத்து போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனை கண்டுபிடிக்க சுங்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தில்லியில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவிருந்த பார்சல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த லெஹெங்காவில் 3,900 கிராம் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மதிப்பு சுமார் ரூ.1.7 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.