ஒன்பது மற்றும், பிளஸ் 1 வகுப்புகளுக்கு தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. தொற்று பரவல் குறையத் துவங்கியதையடுத்து, 9, 10, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், சமீபத்தில் திறக்கப்பட்டன. சமீபத்தில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் முதல்வர்களுக்கு, தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவ- மாணவியருக்கு, கல்வி கற்பதில் ஏற்பட்ட இடைவெளியை, முதலில் சரிசெய்ய வேண்டும்.
அதன்பின், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், அவர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும். ஏப்ரல், 1ம் தேதி முதல், 2021 – 22க்கான கல்வியாண்டை, சம்பந்தபட்ட மாநில அரசுகளின் அனுமதியுடன் துவக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.