ப்ரீ பயர் கேமிற்கு அடிமையான 8 ஆம் வகுப்பு மாணவன் தன்னுடைய தாய் சேலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி என். ஜி. ஓ நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பாபு என்பவரின் மகன் ராகேஷ். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் வகுப்பிற்காக எல்லா பெற்றோர்களை போல பாபுவும் தன் மகனுக்கு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுக்க அதில் ப்ரீ பயர் கேம் விளையாட ஆரம்பித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் விளையாட்டிற்கு அடிமையான ராகேஷ் பாயிண்டுகளை வாங்க முடியாமல் தவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் ராகேஷ் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த மாணவன் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராமல் இருந்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சென்று பார்க்கையில் அறை உள்புறமாக தாள் போடப்பட்டு இருந்தது.
உடைத்து சென்று உள்ளே பார்த்த போது சீலிங்கில் தாயின் புடவையில் தூக்கில் தொங்கிய நிலையில் ராகேஷ் சடலமாக கிடந்துள்ளார். தங்கள் ஒரே மகன் உயிரிழந்தை கண்டு பெற்றோர் கதறி அழும் காட்சி காண்போர் இதயத்தை நொறுங்க செய்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ப்ரீ பயர் விளையாட்டால் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் தவித்துக் கொண்டு இருந்த மாணவன் ராகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இளைஞர்கள் மாணவர்கள் என வயது பாகுபாடின்றி ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி தங்களை தாங்களே அளித்து கொண்டு வாழ வேண்டிய வயதில் தவறான முடிவுக்கு செல்வது அதிகரித்து வருகிறது.
பலரின் உயிரை பறிக்கும் இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்பது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.