ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரியிலிருந்து திரும்பும் போது ஆட்டோ டிரைவர் தன்னை கடத்தி 4 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி போலியாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. கல்லூரியில் இருந்து வீடு திரும்பவதற்கு தாமதமானதால், தாய்க்கு என்ன காரணம் சொல்வது என்று பயந்து இந்த நாடகத்தை நடத்தியதாக மாணவி போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் காவல் எல்லைக்குட்பட்ட ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ்பகவத் கூறுகையில், அன்றைய தினம் சுமார் ஆறரை மணி அளவில் அந்த மாணவியின் உறவினரிடம் இருந்து போலீஸ் எண் 100-க்கு மாணவி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது
விரைந்து செயல்பட்ட போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பின் அந்த மாணவியை கட்கேசர் பகுதியிலுள்ள காலி இடம் ஒன்றில் இருந்து அரை குறை ஆடைகளுடன் மீட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த மாணவி ஏறி சென்ற ஆட்டோவின் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினோம்.
அதன்பின் மேலும் சில ஆட்டோ டிரைவர்களின் போட்டோக்களை எடுத்து வந்து அந்த மாணவியிடம் காண்பித்து, உன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் புகைப்படங்கள் இவற்றில் உள்ளதா என்று கேட்டோம். அப்போது ஒரு ஆட்டோ டிரைவரின் புகைப்படத்தை காண்பித்து அவர், என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் இந்த நபரும் இருந்தார் என்று அந்த மாணவி கூறினார்.
அந்த ஆட்டோ டிரைவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, மாணவி கடத்தல், பாலியல் பலாத்காரம் ஆகியவை நடைபெற்றதாக கூறிய சமயத்தில் அவர் தான் ஷாப்பிங் மால் ஒன்றில் இருந்ததாகவும், அதன்பின் பாருக்கு சென்று மது அருந்தியதாகவும் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ஷாப்பிங் மால் மற்றும் பார் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அவர் கூறியது உண்மை என்று தெரிய வந்தது. மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் கட்கேசர் பகுதியில் உள்ள மேலும் பல சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த மாணவி ஆட்டோவை விட்டு இறங்கி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றது தெரியவந்தது.இது போன்ற அறிவியல் பூர்வமான விசாரணைகளுக்கு பின் அந்த மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அன்றைய தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது.
எனவே அதற்கான காரணத்தை தாயிடம் கூட இயலாத நிலையில், இந்த மெகா நாடகத்தை அரங்கேற்றினேன் என்று ஒப்புக்கொண்டார்.